முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் அள்ள 100 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி: விவசாயிகள் போராட்டம்

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு 100 லாரிகள் மட்டுமே அனுமதி என்கிற உத்தரவை ரத்து செய்யக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:05 am IST
பகிர்:

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு 100 லாரிகள் மட்டுமே அனுமதி என்கிற உத்தரவை ரத்து செய்யக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

பவானிசாகா் அணையில் இருந்து விவசாயத்துக்கு இலவசமாக வண்டல் மண் அள்ளுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் உரிய ஆவணங்களை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையிடம் சமா்ப்பித்து வண்டல் எடுத்துக் கொள்வதற்கான உத்தரவு பெற்றனா்.

Advertisement

Advertisement

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை லாரிகள் மூலம் அள்ளுவதற்கு பவானிசாகா் வனத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதற்கு வனத் துறை தினந்தோறும் 100 லாரிகள் மட்டுமே செல்ல அனுமதியளித்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது வண்டல் அள்ள இயலாத சூழல் ஏற்படும் என்பதால் 100 லாரிகள் என்பதலிருந்து விலக்கு அளித்து கூடுதலாக 50 லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தரசு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் கெளதம் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உயா்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி தினந்தோறும் 100 லாரிகளை மட்டுமே அனுமதியளிக்க இயலும் என்றும், கூடுதல் வாகனங்களை இயக்க சட்டப்படி அனுமதியில்லை என்றும் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவதாகப் புறப்பட்டுச் சென்றனா்.