குன்னூர் அருகே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டம்: தொழிலாளர்கள் பீதி
குன்னூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமேன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத்
குன்னூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமேன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப் பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கின்றன.
இதனைத் தடுக்க வனத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வன விலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குன்னூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமேன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் குட்டியுடன் 5 யானைகள் முகாமிட்டன.
அங்கு மேராக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயப் பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் குந்தா வனத் துறையினர் ஈடுபட்டனர்.
ஆனால், அவை வனப் பகுதிக்குள் செல்லாமல் கிரேக்மோர், கிளன்கர்னி, குறியமலை ஆகிய பகுதிகளுக்குள் புகுந்தன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதனால் பச்சை தேயிலைப் பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.