உதகையில் மாவட்ட நீதிமன்றத்தில் 13-ஆவது ஆண்டு சமரச தினம் அனுசரிப்பு
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 13-ஆவது ஆண்டு சமரச தினம் அனுசரிக்கப்பட்டது.
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 13-ஆவது ஆண்டு சமரச தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சமரச தினம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட நீதிபதி பி.வடமலை முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், சார்பு நீதிபதி சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட நீதிபதி பி.வடமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்று முறைத் தீர்வு என்பது வழக்கமான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டதாகும். பாதிக்கப்பட்ட தரப்பினரே நேருக்கு நேர் அமர்ந்து பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று முறைத் தீர்வில் மத்தியஸ்தம், இழப்பீடு, லோக் அதாலத் உள்ளிட்ட 4 வழிமுறைகள் உள்ளன. நீதிமன்றத்தின் நடைமுறைகளைப் போலவே லோக் அதாலத் முறையிலும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது. லோக் அதாலத்தில் கொடுக்கப்படும் தீர்ப்புகளுக்கு அப்பீல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியஸ்த முறையில் வழக்குரைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக வழக்குகள் சமரச மையத்தில் தீர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் இந்த மத்தியஸ்தர்களுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 14 வழக்குரைஞர்கள் இத்தகைய பயிற்சி பெற்றுள்ளனர். இதன்மூலமாக கால விரயமும், பண விரயமும் தவிர்க்கப்படுகிறது. இதில் மனுதாரர்களுக்கு சாதக பாதகங்களுக்கேற்ப நீதிமன்றக் கட்டணம்கூட திருப்பித் தரப்படுகிறது. இதில், எத்தகைய வழக்குகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குழுவின் ஆய்வுக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும். சில வகையான கிரிமினல் வழக்குகளைக் கூட சமரச மையத்தின் மூலமாக விவாதித்துத் தீர்வடையலாம். வழக்குரைஞர்கள் இல்லாதவர்களுக்கு இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாகத் தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். இதற்குக் கட்டணம் ஏதும் இல்லையென்பதால் இத்தகைய வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.