நிழலி கிராமத்தில் பட்டா நிலத்தில் குடியேற அனுமதி மறுப்பதாகப் புகார்
காங்கயம் அருகே, நிழலி ஊராட்சிப் பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் பயனாளிகளைக் குடியேற விடாமல் தனி
காங்கயம் அருகே, நிழலி ஊராட்சிப் பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் பயனாளிகளைக் குடியேற விடாமல் தனி நபர்கள் தடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காங்கயம் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கயம் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியரிடம், அக்கட்சியின் மாவட்டச் செயலர் நா.தமிழ்முத்து செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம் :
நிழலி கிராமத்துக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் கிராமத்தில் சொந்த வீடு இல்லாத 20 குடும்பங்களுக்கு அதே கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா 1988 ஆண்டு வழங்கப்பபட்டது. இதில் 20 குடும்பத்தினர் குடிசை அமைத்து குடியிருந்துள்ளனர். அந்த சமயத்தில் அருகே உள்ள கொடுவாய் பகுதியைச் சேர்ந்த 3 பேர் வந்து அங்கேயுள்ள மக்களை மிரட்டி வெளியேற்றி விட்டு, குடிசைகளை அகற்றியுள்ளனர். மீண்டும் குடிசை அமைத்தபோது, அவர்கள் மீண்டும் குடிசைகளை அகற்றியுள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக அந்த 3 பேர் மீதும் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர், 2005 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் இந்த இடத்தை ஆய்வு செய்து, ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்ட 20 குடும்பங்களுக்கும் அந்த இடத்தில் உரிமையுண்டு என உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும், கடந்த 30 ஆண்டு காலமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடியேற முடியாமல் பயனாளிகள் தவித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த இடத்தில் அந்த 3 கம்பி வேலி அமைத்து, கட்டடம் கட்டுவதற்கு முயற்சித்து வருகின்றனர். எனவே, தாங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு, அரசு வழங்கிய பட்டா இடத்தில் 20 குடும்பங்களும் வீடு கட்டிக் குடியேற பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காங்கயம் தொகுதி செயலர் ஜான்நாக்ஸ், குண்டடம் ஒன்றிய செயலர் ப.காளிமுத்து, நகரச் செயலர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.