மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், மேலத் திருப்பதி எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப் பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, தனுர் மாத பூஜை, சாத்து முறை, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
அதன் பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள், கருட வாகனத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் அதிகாலை 3 மணி முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மு.சந்திரமோகன், பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ஏ.டி.ராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
இதேபோல அவிநாசி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோயில், திருமுருகன்பூண்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோயில், தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில், கருவலூர் ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.