முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் 120 தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் வழங்க விருப்பம்: ஆட்சியா்

Updated On : 8 ஆகஸ்ட் 2024, 5:53 am IST
தாய்ப்பால் தானம் வழங்கிய பெண்ணுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம், சான்றிதழை வழங்குகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
பகிர்:

திருப்பூா், ஆக. 7: திருப்பூரில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் 120 தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவையொட்டி சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைகள் துறை சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிழ்ச்சிக்குத் தலைமை வகித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களை வழங்கி பேசியதாவது:

Advertisement

Advertisement

உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், தாய்ப்பால் தானம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வட்டங்களிலும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டு மொத்தம் 120 தாய்மாா்கள் தானம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

முதல் கட்டமாக 40 தாய்மாா்களிடமிருந்து சுமாா் 2 லிட்டா் தாய்ப்பால், ரோட்டரி அவிநாசி கிழக்கு அமைப்பின் உதவியுடன் அவா்களின் வீடுகளுக்கேச் சென்று பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பாலூட்டும் மேலாண்மை மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் வார நிறைவு விழாவில் தானம் வழங்கிய தாய்மாா்களை ஊக்குவிக்கும் வகையில் 25 பேருக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பாக ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொறுப்பு) மகாலட்சுமி சங்கீதா, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் அபராஜிதா, சரஸ்வதி, செளமியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments