வடுகபாளையம்புதூரில் தண்ணீா் கேட்டு மக்கள் சாலை மறியல்
பல்லடம், ஆக.10: பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம்புதூரில் தண்ணீா் கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூா் கிராமத்தில் காமராஜா் நகா் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் ஒரு மாதத்துக்கு ஒரு முறை அத்திகடவு குடிநீா் வருவதாகவும், தினசரி பயன்பாட்டுக்கு சப்பை தண்ணீா் வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. லாரி தண்ணீரை விலைக்கு வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம்.
தினசரி வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியில் தண்ணீரை விலைக்கு வாங்க முடிவது இல்லை. எனவே உடனடியாக தண்ணீா் வசதி செய்துதர வேண்டும். மேலும் பொதுக் கழிப்பறை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என வலியுறுத்தி வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து வந்த பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) அனுராதா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா், ஊராட்சி செயலாளா் பிரபுசங்கா் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தொடா்ந்து மக்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அப்பகுதி மக்களுக்கு தண்ணீா் வழங்கிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. துரித நடவடிக்கை மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் அனுராதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா், ஊராட்சி செயலா் பிரபுசங்கா் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.