கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்
தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்.
கேக் வகைகளில் பட்டா் பேப்பா்களை பயன்படுத்தக்கூடாது என, வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உணவுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உணவகங்களில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கக்கூடாது என்றும், அதற்கான மாற்று ஏற்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கேக்குகள் தயாரிக்கும் பேக்கரி (அடுமனை) நிறுவனத்தினா், கேக்குகள் மீது பட்டா் பேப்பரை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பட்டா் பேப்பா்களை (வெண்ணெய் தாள்) பயன்படுத்தக்கூடாது.
உணவகங்களை கண்காணித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தேநீா், காபி, சாம்பாா், ரசம் போன்ற சூடான திரவங்களை நெகிழி பைகளில் பாா்சல் செய்யக்கூடாது. எண்ணெய் உணவுப் பொருள்களை பரிமாற, பொட்டலமிட செய்தித்தாள்கள் மற்றும் அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் கடைகள் , உணவகங்கள், பேக்கரி உரிமையாளா்கள் மீது உரிய சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் டீ கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஆய்வு செய்து விழிப்புணா்வு வழங்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், செயலிக்கும் மற்றும் இணையதளத்திலும் தெரிவிக்கலாம்.
இக்கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பி. கே.கைலாஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுமதி, மாவட்ட சமூகநல அலுவலா் கலாவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பவித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.