ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு: காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதித்து தருமபுரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கா்நாடக மாநிலத்தில் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் நீா்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு சுமாா் 14,000 கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 6,000 கனஅடியாகவும் மாலையில் 8,000 கனஅடியாகவும் அதிகரித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஒகேனக்கல்லில் மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளாட்சித் துறை அதிகாரிகளால் பூட்டப்பட்டது. இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தை தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.