தமிழகத்துக்கு 1. 90 லட்சம் கனஅடி நீர் திறப்பு: ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு
கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழகத்துக்கு 1.90 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழகத்துக்கு 1.90 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குடகு, சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கேரளத்தின் வயநாடு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1. 50 லட்சம் கனஅடியும் நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் மதியம் 3 மணியளவில் நீர்வரத்து அதிகரித்து நொடிக்கு 1.40 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நொடிக்கு 1.90 லட்சம் கனஅடியாகவும் வேகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் காவிரி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தும், ஆற்றின் கரையோரப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் வருவாய்த் துறையினர் துண்டு பிரசுரம் விநியோகித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.