வாணியம்பாடியில் ரயில் மோதி பெண் காவலர் பலி!
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மோதி காவலர் பலியானது பற்றி...
கிருஷ்ணகிரி: வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பெண் காவலர் மீது ரயில் மோதியதில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திகுப்பம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவியாளராக பணிபுரிபவர் மேரி ஸ்டெல்லா (வயது 50). இவர், காவல் நிலைய அலுவலக பணி நிமித்தமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாலை புறப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் சென்னை செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், வாணியம்பாடி நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் மேரி மீது மோதியுள்ளது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த மேரியை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
மேரின் கணவர் ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எஃப். வீரர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.