கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி தொடக்கம்
கிருஷ்ணகிரியில் 30-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்வில் 212 பயனாளிகளுக்கு ரூ. 4.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 30-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்து, அனைத்து அரசுத் துறை அரங்குகளையும் பாா்வையிட்டாா்.
Advertisement
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), டி.ராமச்சந்திரன் (தளி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கண்காட்சியானது தொடா்ந்து 28 நாள்களுக்கு நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இந்த கண்காட்சியில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தியா நுழைவாயில் (இந்தியா கேட்), சுயபடம் எடுக்கும் பகுதி, காய்கறிகள் மூலம் மயில், கழுகு போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
படவரி...
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, கே.கோபிநாத் எம்.பி., எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன், டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.