ஒசூரில் 14-வது மாநில நரம்பியல் மாநாடு: மருத்துவக் கட்டமைப்பு, புதிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்!
ஒசூரில் நடைபெற்ற 14-வது மாநில நரம்பியல் மாநாடு குறித்து...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (TAN) 14-வது ஆண்டு மாநில நரம்பியல் மாநாடு (TANCON 2026) ஒசூரில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் டாக்டர் ரங்கராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இம்மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜே. அருண்ராஜ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும், TANCON 2026 மலர், வலிப்பு நோய் குறித்த சிறப்புக் கையேடு (Monogram on Epilepsy) உள்ளிட்ட மூன்று முக்கிய மருத்துவ நூல்களையும் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
அமைச்சர் உரை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனது உரையில், தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கேத்லேப் வசதிகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் 36 புதிய முதுகலை மருத்துவ இடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமின்றி, அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அளவிலும் சிறப்பு மருத்துவ சேவைகள் மற்றும் டெலிமெடிசின் வசதிகள் பரவலாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், மருத்துவர்கள் தங்கள் பணி அழுத்தத்தைக் குறைக்க பணி-வாழ்க்கை சமநிலையைப் பேண வேண்டும் என்றும், கலை, இலக்கியம் மற்றும் புதிய பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள்: சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் மற்றும் மூத்த விஞ்ஞானி டாக்டர் சுந்தர் சுவாமிநாதன், தனது மருத்துவ மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எளிய மற்றும் குறைந்த செலவிலான மருத்துவக் கண்டுபிடிப்புகள் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும், இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் பேசினார்.
நரம்பியல் துறையின் முக்கியத்துவம்: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சத்யபாமா, நரம்பியல் நோய்களைக் கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து உரையாற்றினார்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நரம்பியல் சங்கத் தலைவர் டாக்டர் எல். சங்கரநாராயணன், செயலாளர் டாக்டர் கே. முகந்தன், மாநாட்டின் அமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் ரங்கராஜ், அமைப்புக் குழுச் செயலாளர் டாக்டர் சந்திரசேகரன், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
The 14th Annual State Neurology Conference (TANCON 2026) of the Tamil Nadu and Puducherry Association of Neurologists (TAN) was successfully held in Hosur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.