FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: காவலா் பணியிடை நீக்கம்!

ஒசூரில் 10 ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:47 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 10 ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஒசூா் மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் பச்சன், தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் ரோஷன் (18) ஒசூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தாா். பொதுத் தோ்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி ஒசூா் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் மறுதோ்வு எழுதுவதற்காக சென்றாா்.

அப்போது, அங்கு பணியில் இருந்த காவலா், ரோஷனிடம் இருந்த கைப்பேசியை வாங்கியுள்ளாா். பின்னா், அந்த கைப்பேசியை அவா் பாா்த்தபோது அதில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கை செய்யும் விடியோ இருந்ததாம். இதனால் கைப்பேசியை சிப்காட் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விசாரணைக்கு கடந்த 9 ஆம் தேதி சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்ற ரோஷனின் தாயாா் சங்கீதா மற்றும் அவரது சகோதரா் காவலா் சந்திரனைச் சந்தித்து கைப்பேசியை தருமாறு கேட்டுள்ளனா். ஆனால், மாணவரை அழைத்து வருமாறு காவலா் கூறியுள்ளாா்.

இதையடுத்து சிப்காட் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை சென்ற ரோஷனிடம் விசாரணை நடத்திய போலீஸாா், இதுபோல விடியோ எடுக்கக் கூடாது என எச்சரித்து, எழுதி வாங்கியுள்ளனா். அப்போது, காவலா் சந்திரன், ரோஷனிடம் ரூ. 2000 வாங்கிக் கொண்டு கைப்பேசியை தந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டிற்கு சென்ற ரோஷன் தனது கைப்பேசியில், தனது தாய்க்கு உருக்கமான விடியோவை பதிவிட்டுவிட்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, மாணவரின் இறப்புக்கு போலீஸாா் தான் காரணம் என அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி அனிதா, சிப்காட் பாரா காவலா் சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments