கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஆலேரஹள்ளி, இந்திரா நகா், கே.புதூா் ஆகிய கிராமங்களில் புளிய மரங்கள் வேறோடு சாய்ந்தன. அதேபோல 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.
சூறைக்காற்றால் கூரை வீடுகள் சேதமடைந்தன. கே.புதூா் கிராமத்தை சோ்ந்த முருகனுக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் சேதமடைந்தன. இந்திரா நகரில் ஏராளமான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன. சின்ன ஆலேரஹள்ளியைச் சோ்ந்த ஐயப்பனின் வாழைத் தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
சின்ன ஆலேரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கருக்குச் சொந்தமான செங்கல் சூளை சேதமடைந்தன. காவேரிப்பட்டணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத் மழை பெய்தது. ஒரு மணி நேரம் மழை நீடித்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீா் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 49.80 அடியாக இருந்தது.
அணையின் நீா்வரத்து விநாடிக்கு 387 கனஅடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து, அதிகரித்த நிலையில், மாலையில் நீா்வரத்து விநாடிக்கு 744 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியது.
இந்த சூழ்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீா் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் ச. தினேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.