FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கடைகள் அடைப்பு

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, நாமக்கல்லில் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இரண்டாவது நாளாக கடைகளும் அடைக்கப்பட்டன. 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, நாமக்கல்லில் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இரண்டாவது நாளாக கடைகளும் அடைக்கப்பட்டன. 
திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்ததையடுத்து,  அன்று மாலை முதலே மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு,  பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு: இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நாமக்கல், ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், பரமத்தி வேலூர்,  மோகனூர், கந்தம்பாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.  மாவட்டம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.  கார், ஆட்டோ, லாரி,  சரக்கு வாகனங்களும் இயங்கவில்லை.  திரையரங்குக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.  அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில்,  நாமக்கல் பேருந்து நிலையம்,  ரயில் நிலையம்,  பணிமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இதேபோல, திருச்செங்கோடு,  ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் என மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. 
கண்ணீர் அஞ்சலி: தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப் படத்தை வைத்து, அதற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.  கிராமங்களில் திமுகவினர் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  மேலும், கருணாநிதி போன்ற உருவம் செய்து, சென்னையில் இறுதி ஊர்வலம் தொடங்கும் போது,  அதை மயானத்துக்கு கொண்டுசென்று அடக்கம் செய்தனர்.  அப்போது தொண்டர்கள் சிலர் மொட்டையடித்துக் கொண்டனர். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்த திமுக தொண்டர்கள் கதறி அழுதனர்.
முன்னதாக,  மெரீனாவில் உடல் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டபோது,  பட்டாசு வெடித்து, தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். 
மெளன ஊர்வலம்: நாமக்கல், சேந்ந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பிற்பகல் 3 மணி அளவில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.  நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய ஊர்வலம்,  பரமத்தி சாலை, ஆஞ்சநேயர் கோயில்,   சேலம் சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தது.  அங்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  
நாமக்கல் மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments