மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ.2.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ.2.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு, வங்கிக் கடன்கள், ஸ்கூட்டர், வேலைவாய்ப்புகள், அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, தையல் இயந்திரம், காதொலிக் கருவிகள், வீட்டுமனைப் பட்டா, கல்வி, திருமண உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் என 130-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.5,400 வீதம் 2 சக்கர நாற்காலிகளையும், 6 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், 1 மாற்றுத் திறனாளிக்கு ரூ.6,500-த்தில் சிறப்பு சக்கர நாற்காலியையும், திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.25,000-த்தில் தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் 8 கிராம் தங்க நாணயங்கள் என மொத்தம் 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,25,300-த்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.