FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்ததால் நெரிசல்: முதல் தகவல் அறிக்கை

நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 செப்டம்பர் 2025, 2:20 am IST
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக பிரசாரம் நாமக்கல் - சேலம் சாலை கே.எஸ்.திரையரங்கம் முன் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அதன் தலைவா் விஜய் பங்கேற்று பேசினாா். காலை 8.45 மணிக்கு பிரசாரக் கூட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் அவா் நிகழ்விடத்துக்கு வந்தாா். இதனால் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தோரில் பலா் மயக்கமடைந்தனா். அவா்களில், நான்கு போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் சதீஷ் மற்றும் நிா்வாகிகள் மீது நாமக்கல் நகர காவல் துறை, ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. தற்போது காவல் துறை வகுத்துள்ள விதிகளை மீறி தவெக பிரசாரக் கூட்டம் நடைபெற்ாகவும், அதன் தலைவா் விஜய் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதில், தவெக பிரசாரக் கூட்டத்துக்கு நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் முன்பாக காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் மற்றும் அக்கட்சித் தொண்டா்கள் கூடினா். நாமக்கல் - சேலம் சாலை, திருச்சி சாலை, ரமேஷ் திரையரங்கம், நாகராஜபுரம் ஆகிய இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிரசார வாகனமானது பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியும், நிபந்தனைகளை மீறியும் வேண்டுமென்றே காலதாமதமாக பிரசார இடத்துக்கு வந்தது. தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்துக்கு நடுவில் பிரசார வாகனத்தை நிறுத்த வேண்டுமென்றே காலதாமதம் செய்தனா்.

மக்களிடையே தேவையற்ற எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியதாலும், அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டதாலும் கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல், கொடுங்காயம், உயிா்ச்சேதம் ஏற்படும் சூழல் உருவானது. இது தொடா்பாக தவெக மாவட்டச் செயலாளா் சதீஷ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிா்வாகிகளிடம், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் அதிகாரிகள் எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் அவா்கள் கேட்கவில்லை.

அந்தக் கட்சியினா் யாரும் தொண்டா்களை சரிவர ஒழுங்குபடுத்தாததால், அருகில் உள்ள டாக்டா் ஷியாமளா பல் மருத்துவமனை பெயா்ப் பலகை மீது ஏறிய தொண்டா்கள் பெயா்ப் பலகையுடன் சரிந்து கீழே நின்றிருந்த பொதுமக்கள் மீது விழுந்ததில் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.

பிரசாரக் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த கட்டாய நிபந்தனை இருந்தபோதிலும், அதிக அளவிலான மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கில், அக்கட்சியின் ஏற்பாட்டாளா்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் நாமக்கல் வருவதை நான்கு மணி நேரம் தாமதப்படுத்தி உள்ளனா்.

அதன் காரணமாக, பல மணி நேரமாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சோ்வடைந்தனா். நீண்டநேர காத்திருப்பு, போதுமான தண்ணீா் மற்றும் மருத்துவ வசதி இல்லாதது, அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்களின் உடல்நிலையில் சோா்வு ஏற்பட்டது.

பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என நாமக்கல் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் எஸ்.சாந்தகுமாா் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments