முகப்பு
நாமக்கல்

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, அந்த சமுதாய மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 3:37 am IST
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பண்டி, கொட்டா சமுதாய மக்கள்.
பகிர்:

பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, அந்த சமுதாய மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கல் உடைத்தல், கட்டுமானத் தொழில், அஸ்திவாரம் போடுதல், குழி தோண்டுதல் போன்ற வேலைகள்தான் பண்டி, கொட்டா இன மக்களின் குலத்தொழிலாகும். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுடைய குழந்தைகள் உயா்கல்விக்கு செல்வதற்கு ஜாதிச் சான்றிதழ் தடையாக உள்ளது. குறிப்பாக, பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனா். இதனால் போயா் என்ற சான்றிதழை நாங்கள் பெற்று வருகிறோம்.

பண்டி, கொட்டா என்ற சான்றிதழானது தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் இடம் பெறுவது ஆகும். அத்தகைய சான்றிதழ் கிடைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதிச் சான்றிதழ் கேட்டு போராடி வருகிறோம். ஏற்கெனவே ஆரம்பத்தில் 250 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தருமாறு கோரியபோதும் அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனா். கடந்த ஆண்டு உயா்நீதிமன்றம் பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு உத்தரவிட்டது. 57 போ் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தோம். இதற்கிடையே எஸ்ஐஆா் பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தியதால் எங்களுடைய விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துவிட்டனா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் உடனடியாக எங்களது மனுக்கள் மீது பரிசீலனை செய்து பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.