எடப்பாடி அருகே பெண் துப்புரவு தொழிலாளி எரித்துக் கொலை? போலீஸார் விசாரணை
எடப்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் துப்புரவுத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தார்.
எடப்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் துப்புரவுத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தார். அவர் தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சித்தூர் பனங்காடு காலனி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமர் (57). இவரது மனைவி வள்ளி (45). இவர் சித்தூர் ஊராட்சி அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ராமர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (26) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஜெயலட்சுமிக்கு கிருஷ்ணவேணி (7), சத்தியப்பிரியா (4) என்ற இருபெண் குழந்தைகள் உள்ளனர். ராமருடன் அவரது தம்பி நாகராஜ் (49), அவரது மகள் பார்வை திறன் இல்லாத மாற்றுத் திறனாளி வனிதா (30), மகன் மணி (28) ஆகியோரும் வசித்து வந்தனர்.
இந் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ராமர், ஜெயலட்சுமி, குழந்தைகள் ஓர் அறையிலும், ராமரின் தம்பி நாகராஜ், வள்ளி, மாற்றுத் திறனாளி வனிதா மற்றொரு அறையிலும், நாகராஜின் மகன் மணி வீட்டின் வேறு ஓர் அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் வள்ளியின் அலறல் சத்தம் திடீரென கேட்டுள்ளது. இதனையடுத்து, அனைவரும் விழித்தனர். அப்போது வள்ளி தூங்கிக் கொண்டிருந்த கட்டில் தீப்பற்றி எரிந்த நிலையில், அவர் தீயில் கருகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியாத நிலையில் அவர் கருகி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து வள்ளியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீஸார், வள்ளியின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இவ் வழக்கு தொடர்பாக சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.