முகப்பு
சேலம்

சேலத்தில் நடனமாட சொல்லி ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கோபடைந்த நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட சொல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்ததால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட சொல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்ததால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரையிசை கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல தமிழ் நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில் நடன நிகழ்ச்சியை காண்பதற்கு கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் மக்கள் குவிந்து காத்திருந்தனர். அப்போது வெகுநேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்ட்ரியா வந்தார். அவரை காண அவரின் காரை சுற்றி ரசிகர்கள் கூடினர். 

இதனால் காரை விட்டு இறங்க முடியாமல் ஆண்ட்ரியா தவித்தார். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலையச் செய்தனர். இதன்பின்பு காரை விட்டு இறங்கி வந்தார் ஆண்ட்ரியா. மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர். தொடர்ந்து ஓ சொல்றியா மாமா பாடலை அவர் பாடினார். பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கூச்சலிட்ட நிலையில் ஆண்ட்ரியா கோபமடைந்தார்.

உடனே, அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாடி செல்வதாக கூறி மற்றொரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடினார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமானதால் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர், ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார். ஆண்ட்ரியாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →