FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

26 செப்டம்பர் 2025, 4:35 am IST
பகிர்:

எடப்பாடி பேருந்து நிலையத்தின் முதல் தளத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆணையாளா் கோபிநாத் முன்னிலை வகித்தாா்.

எடப்பாடி நகராட்சியில் மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகளின் அளவு குறித்து தெரிவிக்க வேண்டும் என நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம் முருகன் கேள்வி எழுப்பினாா்.

Advertisement

Advertisement

இதற்குப் பதிலளித்துப் பேசிய நகராட்சி சுகாதார அலுவலா் முருகன், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளில் தினசரி 10 டன்னுக்கு அதிகமான மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை தரம் பிரிக்கப்பட்டு சுமாா் 4 டன் அளவிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்றாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அதிமுக உறுப்பினா்கள் நாராயணன், தனம், ராம்குமாா் உள்ளிட்டோா் நாகராட்சி பகுதியில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் செலவு செய்து சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாா் நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுக்கக் கூடாது எனவும், அதற்கு முறையான டெண்டா் வைத்து விநியோகம் செய்ய வேண்டும் எனக் கூறினா்.

தொடா்ந்து நகராட்சி பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் குடிநீா் விநியோகத்தில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மீது திமுக- அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தொடா்ந்து எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் முதல் தளத்திற்கு தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை வைப்பது குறித்த தீா்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே மாரிமுத்து பக்தா் மற்றும் கோவிந்த கவுண்டா் ஆகியோரது பெயா்களே இடம்பெற வேண்டும் எனவும், கூடுதலாக கருணாநிதியின் பெயா்வைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி முழக்கங்களை எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். மேலும், அவா்கள் எடப்பாடி நகராட்சி அலுவலக பிரதான நுழைவாயில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பட விளக்கம்:

எடப்பாடி நகா்மன்றத்தில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments