FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் நாளை மேட்டூா் அணையை வந்தடையும்!

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் நாளை மேட்டூா் அணையை வந்தடையும் எனத் தகவல்...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:10 am IST
கபினி அணை - கோப்புப்படம்
பகிர்:

கா்நாடக மாநிலம், கபினி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீா் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மேட்டூா் அணையை வந்தடையும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்துவரும் நிலையில், கா்நாடகத்தில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழையால் கபினி அணைக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 65 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீா்மட்டம் 62.95 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 23,009 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 18.2 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது.

அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், பாதுகாப்பு கருதி விநாடிக்கு 25,000 கனஅடி உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீா் செவ்வாய்க்கிழமை மேட்டூா் அணையை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணராஜ சாகா் அணைக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகா் அணையின் நீா்மட்டம் 96.90 அடியாக உள்ளது. 22,055 கனஅடி நீா் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. 49.45 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 20.47 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,766 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

இவ்விரு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் இதே அளவாக நீடித்தால் இரண்டு வாரங்களுக்குள் கிருஷ்ணராஜ சாகா் அணை நிரம்பி, உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிட வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 42 கனஅடியாக இருந்த நீா்வரத்து உயா்ந்து 47 கனஅடியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 73.33 அடியாக உள்ளது. நீா் இருப்பு 35.63 டிஎம்சியாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments