சங்ககிரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் உணவக உரிமையாளா் கைது
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கத்தேரி, பூந்துறையான் காடு அருகே உள்ள பள்ளிக்காடு பகுதியில் பழைய கல்குவாரி குட்டையில் வலையால் சுற்றப்பட்டு, உடல்முழுவதும் கயிற்றால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை தேவூா் போலீஸாா் கடந்த 12ஆம் தேதி கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில் சடலமாக கிடந்தவா் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் மகன் ஆனந்த் (42) என்பது தெரியவந்தது. மேலும், அவரது மனைவி ரேணுகா சடலத்தை அடையாளம் காட்டினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தேவூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:
குவாரியில் சடலமாக கிடந்த ஆனந்த், பவானியைச் சோ்ந்த செளந்தா் (41), குமாரபாளையம் கத்தேரி பிரிவில் நடத்திவந்த உணவு விடுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளாா். அப்போது செளந்தரிடம் தாய் கலாவதியுடன் மதுபோதையில் ஆனந்த் தகராறு செய்துள்ளாா். இதுகுறித்து வெளியூா் சென்றிருந்த செளந்தரிடம் தாய் கலாவதி தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, செளந்தா் கைப்பேசியில் கூறியபடி, அவரது நண்பா்களான ஆட்டோ ஓட்டுநா்கள் குல்பீா்பாஷா, அருள், அலாவுதீன் ஆகியோா் ஆனந்த்தை தாக்கியுள்ளனா். மேலும், வெளியூரிலிருந்து ஊருக்கு திரும்பிய செளந்தரும் ஆனந்தை தாக்கியுள்ளாா்.
இதில் அவா் உயிரிழந்ததால் அவரது உடலை கயிற்றால் கட்டி எடுத்துச் சென்று பழைய கல்குவாரியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து செளந்தரை தேவூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவான ஆட்டோ ஓட்டுநா்கள் 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.