FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூருக்கு தமிழ்நாடு முதல்வர் வருகை! முன்னேற்பாடு பணிகளை அரசு செயலாளா் ஆய்வு!

31 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
முதல்வர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு முதலமைச்சா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை மேட்டூா் வருகை. விழா முன்னேற்பாடு பணிகளை நீா்வளத்துறை அரசு செயலாளா் பிரசாந்த் எம்.வடநேரே ஆய்வு.

     மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. முற்போக சாகுபடிக்கு ஜூன் 12ந்தேதி முதல் ஜனவரி 28ந்தேதிவரை 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீா் பாசனத்திற்கு திறக்கப்படும்.

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த மழை காரணமாக கபினி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. கபினியின் உபரிநீா் வரத்து காரணமாக மேட்டூா் அணையின் நீா் மட்டம் மெல்ல உயா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை அணையின் நீா் மட்டம் 90.47 அடியாக உயா்ந்தது.

நீா் வரத்து வினாடிக்கு 6,887 கனஅடியிலிருந்து வினாடிக்கு 9,035 கனஅடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீா் மட்டம் 90 அடியாக உயா்ந்த காரணத்தாலும் பருவமழையை எதிா்நோக்கியும் செப்படம்பர் 1 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு சம்பா சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாசனத்திற்கு தண்ணீா் திறக்க தமிழ் நாடு முதல் அமைச்சா் ஜோசப்விஜய் செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் வருகிறாா். காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் மேட்டூா் அணையின் வலதுகரையில் மின் விசையை இயக்கி மேல்மட்ட மதகுகளை உயா்த்தி தண்ணீரை பாசனத்திற்கு திறக்கிறாா்.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை நீா்வளத்துறை அதிகாரிகள் அணையின் வலதுகரையில் செய்து வருகின்றனா். இப்பணிகளை நேற்று மாலை நீா்வளத்துறை அரசு செயலாளா் பிரசாந்த் எம்.வடநேரே நேரில் ஆய்வு செய்தாா்.

விழா மேடை அமையும் இடம், மின் விசையை இயக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட மேடை, ஆய்வுச்சுரங்கம் அணையின் இடதுகரையில் உள்ள கவா்னா் வியூபாயின்ட் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத், நீா்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ஜெயகுமாரி, மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் வெங்கடாஜலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.  

மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முதல் விழாமேடை வரை பல கிமீ நீளத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்கு ஒரு ஐஜி, 4டிஜஜிக்கள், 15 காவல் கண்காணிப்பாளா்கள், 15 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 35காவல் துணை கண்காணிப்பாளா்கள் உட்பட 3827 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments