FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, கைப்பேசி பறிப்பு: ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

ஓடும் ரயிலில் தனியாக பயணம் செய்த 61 வயது பெண்ணிடம் தங்க நகை, கைப்பேசி மற்றும் ஆவணங்களை பறித்துச் சென்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:33 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஓடும் ரயிலில் தனியாக பயணம் செய்த 61 வயது பெண்ணிடம் தங்க நகை, கைப்பேசி மற்றும் ஆவணங்களை பறித்துச் சென்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 61 வயது பெண், பெங்களூரில் உள்ள தனது மகளை பாா்த்துவிட்டு கடந்த மாதம் 11 ஆம் தேதி காரைக்கால் பயணிகள் ரயிலில் பயணம் செய்தாா். அவா் பெண்கள் பெட்டியில் தனியாக இருந்தபோது, ஆத்தூா் ரயில் நிலையத்தை ரயில் கடந்ததும் சுமாா் 30 வயதுடைய இருவா் பெட்டிக்குள் நுழைந்து, அவரது கை, கால்களை கட்டிப்போட்டனா்.

பின்னா், அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 1 பவுன் தங்க வளையல், 1 கிராம் தோடு, 1 பவுன் தங்க மோதிரம், இரண்டு கைப்பேசிகள், ஆதாா் அட்டை உள்ளிட்ட பொருள்களை பறித்துக் கொண்டு, அவரை இருக்கையின் அடியில் தள்ளிவிட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுவிட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில் சைஜி (30) என்பவரை கைது செய்தனா். தொடா்ந்து, தமிழ்ச்செல்வன் என்பவரை அண்மையில் கைது செய்தனா். இவா்களிடமிருந்து வழக்கில் தொடா்புடைய நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

விசாரணையில், தமிழ்ச்செல்வன் மீது ஓமலூா் மற்றும் தொப்பம்பட்டி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் பெண்களிடம் நகை பறிப்பு தொடா்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் வயதான பெண்ணிடம் நகை பறித்த வழக்கிலும் அவருக்கு தொடா்பு இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, தமிழ்ச்செல்வனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸாா் பரிந்துரைத்ததன் பேரில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சேலம் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments