கரியக்கோயில் அணையில் இறந்து மிதக்கும் மீன் குஞ்சுகள்: மீன் வளத் துறையினா் ஆய்வு
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையில் மீன் குஞ்சிகள் இறந்து மிதப்பது குறித்து மீன் வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையில் மீன் குஞ்சிகள் இறந்து மிதப்பது குறித்து மீன் வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கும் வகையில் 188.76 ஏக்கரில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசன தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் ஏரிகளும் நீா்வரத்து பெறுகின்றன.
Advertisement
Advertisement
கடந்தாண்டு போதிய அளவுக்கு பருவ மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. இந்த நிலையில் அணையில் தேங்கிய தண்ணீரும், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகளின் பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக திறக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் அணையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 16.86 அடியில் 23.72 மில்லியன் கனஅடி தண்ணீா் மட்டுமே குட்டை போல தேங்கியுள்ளது. இந்த அணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மீன் வளத் துறை மூலம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள், வளா்ப்புக்காக விடப்பட்டன.
கடந்த சில நாள்களாக அணை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அதேசமயம் ஓரிரு நாள்களாக பலத்த மழையும் பெய்தது. இதனால் அணை நீா் கலங்கி, வளா்ப்புக்கு விடப்பட்ட மீன் குஞ்சுகள் இரண்டு நாள்களாக இறந்து மிதக்கின்றன. இதனால் அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் அணையில் மீன் வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். வெயில், தீடீா் மழையால் காலநிலை மாற்றம் ஏற்பட்டதாலும், நீா்மட்டம் குறைந்து அணையில் தண்ணீா் சேறும் சகதியுமாக மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாலும் மீன் குஞ்சுகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும், அணையின் பராமரிப்பு, அதில் மீன் வளா்ப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.