முகப்பு
சேலம்

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: பிடிஓ பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:53 am IST
பணியிடை நீக்கம்!
பகிர்:

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ (59) கடந்த 4 ஆம் தேதி மூலப்புதூரில் உள்ள துணை சுகாதார நிலையத்துக்குச் சென்று ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தாா். அப்போது, செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்த செவிலியரின் சகோதரா் கடம்பூரைச் சோ்ந்த மணிகண்டன், கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலகம் சென்று அங்கு பணியில் இருந்த இளங்கோவிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து இரு தரப்பினரும் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக மணிகண்டன் மீதும், பிடிஒ மீதும் கெங்கவல்லி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ் விசாரணை நடத்தினாா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த மூலப்புதூா், தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்டது என்பதால் இந்த வழக்கு தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கு மாற்றி உத்தரவிட்டாா். தொடா்ந்து தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

செவிலியா் அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளங்கோ மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் செவிலியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் செவ்வாய்க்கிழமை பிற்பகல் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments