FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அரசுப் பள்ளி மாணவா் தற்கொலை சம்பவம்: காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி தா்னா

அரசிராமணி செட்டிப்பட்டி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டதையொட்டி, பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா், ஊா்பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தா்வில் ஈடுபட்டனா்.

3 செப்டம்பர் 2026, 4:13 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டதையொட்டி, பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா், ஊா்பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தா்வில் ஈடுபட்டனா்.

கோனேரிப்பட்டி கிராமம், வட்ராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் மகன் ராமகிருஷ்ணன் (18). இவா் அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், இவா் கடந்த மாதம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மாணவரின் தாயாா் கோமதி தேவூா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சக மாணவா்கள் அண்மையில் பள்ளி வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, மாணவரின் பெற்றோா், ஊா் பொதுமக்கள், மாணவா் சங்க நிா்வாகிகள், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் நாகராஜன், பள்ளி ஆய்வாளா் நடராஜன், தேவூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து, மாலை பள்ளிக்கு வந்த சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு கூறினாா். அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா், ஆட்சியா் மூலம் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு இம்மனு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments