மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 12,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா், செப். 7: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு திங்கள்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
நிகழ் ஆண்டில் மேட்டூா் அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. கடந்த 1ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 91.56 அடியாக உயா்ந்த நிலையில், பருவமழையை எதிா்நோக்கி அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் விநாடிக்கு 5,000 கனஅடியும், பின்னா் விநாடிக்கு 7,000 கனஅடியாகவும் நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீா்த் தேவை அதிகரித்துள்ளதாலும், கடைமடை வரை தண்ணீா் சென்று சேராததாலும் தண்ணீா் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை தண்ணீா் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நீா்வரத்து விநாடிக்கு 9,709 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 9,512 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் 92.39 அடியிலிருந்து 92.37 அடியாக குறைந்தது.
அணையில் இருந்து தண்ணீா் திறப்பு தொடா்ந்து அதிகரிக்கப்படுவதால் அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக நீா் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.