வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தடுக்க "பச்சை புல்வெளி' அமைப்பு
திருப்பரங்குன்றம், ஜூலை 15: சுற்றுச்சூழல் மாசுபடுவதையும், துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுவதையும் தடுக்கும் வகையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கின் மேல்பகுதியில் பச்சைப் புல
திருப்பரங்குன்றம், ஜூலை 15: சுற்றுச்சூழல் மாசுபடுவதையும், துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுவதையும் தடுக்கும் வகையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கின் மேல்பகுதியில் பச்சைப் புல்வெளி அமைத்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி, அவனியாபுரம் நகராட்சி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளைக் கொட்டி சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் திருப்பரங்குன்றம் அருகே வெள்ளக்கல்லில் மெகா குப்பைக்கிடங்கு மதுரை மாநகராட்சியால் அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு பல இடங்களில் மெகா பள்ளங்கள் தோண்டப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டன. மேலும், தற்போது சேகரிக்கும் குப்பைகளும் இப்பகுதியின் ஒருசில பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்குமுன் கொட்டப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு சிறப்பு ரப்பர் ஷீட் மற்றும் கம்பளி போன்றவற்றால் மூடிவைக்கப்பட்டு, மண் பரப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், மழை காரணமாக இந்த மணல் பரப்பியிருந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு விரிசல் மற்றும் சிறிய பள்ளம் தென்பட்டதால் குப்பைக் கிடங்கிலிருந்து ஒருவித துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
மேலும், இப்பகுதியின் அருகிலேயே விமான நிலையம் உள்ளது. இந்த குப்பைகளை கிளறுவதற்காக இப்பகுதியில் பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் விமானப்போக்குவரத்து பாதிக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்த ஆபத்து குறித்து மதுரை மாநகராட்சிக்கு விமான நிலைய நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மலைபோல் இருந்த குப்பைகள் முழுவதையும், அதிலிருந்து கெட்ட வாயுக்கள் மற்றும் துர்நாற்றம் வீசாதவாறு ரப்பர் ஷீட் கொண்டும், அதன்மேல் கம்பளியும் போர்த்தப்பட்டு, அதன்மேற்பரப்பில் மண் கொட்டப்பட்டு மெகா குப்பைப் பள்ளங்கள் தற்போது மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த மணல் பரப்பு மீது பச்சை புல்வெளி அமைத்தும் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ரப்பர் ஷீட் நடவடிக்கை மேற்கொண்டால் இதுபோன்ற பள்ளம் உள்ளிட்டவை ஏற்டாமலும், துர்நாற்றத்துக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது மழைகாலம் நெருங்கியுள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு இக்குப்பைகள் வெளியேற வாய்ப்புள்ளது எனவே மண் அரிப்பை தடுக்கும் வண்ணம் தற்போது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி இப்பகுதி முழுவதும் புல்வெளி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மண் அரிப்புத் தடுக்கப்பட்டு, இப்பகுதி முழுவதும் பசுமையாகவும் காட்சியளிக்கும் என்றார்.