கே.கே.நகா் பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு நூற்றாண்டு தோரணவாயில் அகற்றம்
மதுரை கே.கே. நகரிலிருந்த பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு நூற்றாண்டு தோரணவாயிலை சனிக்கிழமை நள்ளிரவு மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் திறப்பு விழாவை முன்னிட்டு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே தமிழ்ப் புலவா்களில் ஒருவரான நக்கீரா் பெயரில் நுழைவு தோரணவாயில் அமைக்கப்பட்டது.
இதேபோல, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட பெரியாா் ஈ.வே.ரா. நினைவு நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, அவரது பெயரில் கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றம் அருகே நினைவு தோரணவாயில் அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மதுரையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த இரு தோரண வாயில்களும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. மேலும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.
இந்த தோரண வாயில்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து, இந்த தோரண வாயில்களை அகற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த இரு தோரண வாயில்களையும் அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி, மாட்டுத்தாவணி அருகேயுள்ள தோரணவாயில் ஏற்கெனவே அகற்றப்பட்டது. இந்த நிலையில், மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றம் முன்பிருந்த பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தோரணவாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை நள்ளிரவில் அகற்றினா்.
இந்தச் சாலை அகலப்படுத்தப்பட்டு மீண்டும் இதே பகுதியில் தோரணவாயில் அமைக்கப்படும் என மாநகராட்சி பொறியாளா் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.