காவல்துறையினருக்கான பணித்திறன் போட்டிகள்: 2-ஆவது முறையாக திண்டுக்கல் சரகம் சாம்பியன்
காவல்துறையினருக்கான பணித்திறன் போட்டிகளில் தடய அறிவியல் பிரிவில் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற
காவல்துறையினருக்கான பணித்திறன் போட்டிகளில் தடய அறிவியல் பிரிவில் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் சரக போலீஸாருக்கு டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
காவல்துறையில் பணிபுரிவோருக்கு தடய அறிவியல் பிரிவு, கணினி விழிப்புணர்வு, குற்ற சம்பவ உற்று நோக்குதல், நாசவேலை தடுப்பு பிரிவு, புகைப்பட பிரிவு, வீடியோ பிரிவு, மோப்ப நாய் கண்டுபிடிப்பு ஆகிய பிரிவுகளில் மாநில அளவிலான பணித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
கடந்த 22 முதல் 28ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற இப்போட்டிகளில், திண்டுக்கல் காவல் சரகத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போலீஸார் என 34 பேர் கலந்து கொண்டனர். 4 மோப்ப நாய்களும் கலந்து கொண்டன.
திண்டுக்கல் சரக அணியினர் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களையும் மற்றும் தடய அறிவியல் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தையும் வென்றுள்ளனர்.
தேனி மாவட்டம் போடி சார்பு ஆய்வாளர் விக்னேஷ்பிரபு தடய அறிவியல் பிரிவில் 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களையும் மற்றும் தடய அறிவியல் பிரிவில் சிறந்த போட்டியாளருக்கான சாதனை கோப்பையையும் வென்றுள்ளார்.
அதேபோல விளாம்பட்டி சார்பு ஆய்வாளர் விஜய் தடய அறிவியல் பிரிவில் 1 வெண்கல பதக்கத்தையும், தேனி மாவட்டம் தென்கரை காவலர் கருப்பையா நாசவேலை தடுப்பு பிரிவில் 1 வெண்கல பதக்கத்தையும், திண்டுக்கல் மாவட்ட மோப்பநாய் மேக்ஸி அதன் பயிற்சியாளர் முதல் நிலை காவலர் மணிகண்டபிரபு, மோப்ப நாய் பிரிவில் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
தடய அறிவியல் பிரிவுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் சுழற்கேடயம் 60 ஆண்டுகளாக சென்னை நகர் அணியிடம் இருந்து வந்தது. முதல் முறையாக கடந்த ஆண்டு திண்டுக்கல் சரக அணியினர் அந்த கேடயத்தை வென்றனர். தற்போது மீண்டும் வெற்றிப் பெற்று, இரண்டாவது முறையாக கேடயத்தை கைப்பற்றியுள்ளனர்.
மாநிலப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ள காவல்துறையினருக்கு, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இரா. சக்திவேல்( திண்டுக்கல்), பாஸ்கரன்(தேனி) ஆகியோர் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.