FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பணியாளர் சங்கங்களிடையே மோதல்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாளர் சங்கங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு,

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:23 am IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாளர் சங்கங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு, உள்ளிருப்பு என போட்டி போட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். 
பணியிட மாறுதல் செய்யும்போது, அருகிலுள்ள பகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ப.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் இரா.மங்களபாண்டியன், கா.பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலத் தலைவர் 
கே.குமரேசன், மாவட்ட செயலர் ம.சுகந்தி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் எஸ்.முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
போட்டி போராட்டம்: இதனிடையே தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துச்சாமி,  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் த.பார்த்தசாரதி, செயலர் எஸ்.கார்த்திகேய வெங்கடேசன் ஆகியோர் தலைமையில், மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் கூறுகையில்,  பணியாளர்கள் சங்கங்கள் தனி நபர்களின் ஆதாயத்துக்காக அரசு நிர்வாகத்தை மிரட்டும் வகையில்  தேவையற்ற ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுவதை கைவிட வேண்டும். 
பெண் ஊழியர்களை அவதூறாக பேசுவதை தவிர்க்க வேண்டும். குரூப் 2 நேரடி அலுவலர்களுக்கான பதவி உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இருவேறு சங்கங்கள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரெதிர் கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டி போராட்டம் நடைபெற்றது.
 இதையடுத்து, இருதரப்பினரையும் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கொடைக்கானல் சென்றுள்ள மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.   
  இருதரப்பிலும் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டம் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments