பழனி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு புகார்: திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆய்வு
பழனியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மடங்கள், அன்னதான சொத்துக்கள் குறித்து திருத்தொண்டர்
பழனியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மடங்கள், அன்னதான சொத்துக்கள் குறித்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோயிலுக்கு பூஜை செய்ய வேண்டி வழங்கப்பட்ட ஏராளமான சொத்துக்களை பலரும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மேலும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், போலியான உயில்கள் தயாரிக்கப்பட்டு கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து திருத்தொண்டர் சபையைச் சேர்ந்து ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக பல இடங்கள் கண்டறிந்து மீட்கப்பட்டு வருகின்றன. பழனியில் புதுதாராபுரம் சாலை, பட்டத்து விநாயகர் கோயில் தெரு மற்றும் கிரிவீதிகளில் பல கோடிக்கணக்கான சொத்துகள் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை இடும்பன்கோயில் அருகே விக்னேஷ்வரர் வகையறாவுக்கு சொந்தமான நிலங்கள், கொழுமம் அரசமரத்தடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடங்களை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியது:
பழனியில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் போலியான பதிவுகளை வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தற்போது கொழுமம் அரசமரத்தடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான மடம் பார்வையிடப்பட்டது. இதற்கு இரண்டு வருடத்துக்கு ரூ.30 லட்சம் வாடகை வழங்குகின்றனர். மேலும் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து விட்டு குத்தகை தராதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதுபோன்ற நிலங்களை கண்டறிந்து மறுஏலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
ஆய்வின்போது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், கோயில் நிலஅலுவலர் சின்னச்சாமி, வருவாய்த்துறை ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.