FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலம்

திண்டுக்கல், தேனி மாவடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

திண்டுக்கல், தேனி மாவடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நாட்டின் 72ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்லில்: திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். 
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி கே.முரளி சங்கர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ந.மனோகர், தேசிய கொடி ஏற்றி வைத்து,  25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, சான்றிதழும், தலா ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தில் ஸ்ரீவாசவி பள்ளியில், வாசவி கிளப் ஆளுநர் சர்மிளா தினேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 
தாடிக்கொம்பு சாலையில் உள்ள வர்த்தக சங்கம், கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பகவதி அம்மன் கோயில் பகுதி, குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னாளப்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி, சேரன் வித்யாலயா மெட்ரிக். பள்ளி செம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி  ஆகிய இடங்களிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பழனியில்: பழனி பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தேசியக்கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேரவைத் துணைத் தலைவர் தமிழரசி செய்திருந்தார்.  
பழனியை அடுத்த புளியம்பட்டி வேல் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர், தாளாளர் குப்புச்சாமி தேசியக்கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி செயலர் ராஜாமணி தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியேற்றினார். இதேபோல், தமாகா அலுவலகம், பழனி சிறுமலர்நடுநிலைப் பள்ளி, ஆர்எம்கேஆர் ரத்தினம் தொடக்கப்பள்ளி, தொப்பம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, பழையஆயக்குடி வஉசி மழலையர் பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில்: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் மும்பை முன்னாள் காவல் ஆணையர் டி.சிவானந்தம், மேற்கு வங்காள வருமானவரித் துணை ஆணையர் ரஷிப்குமார் ஹோட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்பிக்கை ஜேக்கப் நினைவு கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி வளாகத்தில் சுமார் 250 கிலோ உப்பில் வரையப்பட்ட தேசிய கொடி அனைவரையும் கவர்ந்தது. 
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் வட்டாட்சியர் ஆ.லீனாரெஜூனா தேசிய கொடியேற்றினார். ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி ஆணையர் எம். இளவரசன் தேசிய கொடியேற்றினார். இதில் சுகாதார ஆய்வாளர் வீரபாகு, நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை கடை உரிமையாளர்கள் நலச்சங்கம், காவல் நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தொப்பாக்கா வலசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலாயா மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிகளிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது.
கொடைக்கானலில்: கொடைக்கானல் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையர் முருகேசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி ஆணையர் பட்டுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சன் அரிமா சங்கம் சார்பில் அதன் பட்டயத் தலைவர் டி.பி.ரவீந்திரன் தேசிய கொடி ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆஷா ரவீந்திரன், 12 ஆவது வார்டு பொதுநலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் வனத்துறை அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
பெரியகுளத்தில்: பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவுக்கு கல்லூரி முதல்வர் யேசுராணி தலைமை வகித்தார். பெரியகுளம் காவல் ஆய்வாளர் மதனகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்தார். மாணவர் நாடாளுமன்ற பிரதமர் ஜெகதீஸ்வரன் கொடியேற்றினார். மாணவர் சுகாதாரத்துறை அமைச்சர் சரண்யா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தலைவர் சுப்பையா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.  பெரியகுளம் சேக்கிழார் நடுநிலைப்பள்ளி, திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளிலும் சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கம்பத்தில்: கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில்  உள்ள புனித மேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவுக்கு பள்ளியின் முதல்வர் மேரிகுரியன் தலைமை வகித்தார். தாளாளர் ஜெயராணி வரவேற்றார். உத்தமபாளையம் கல்லூரி பேராசிரியர் முகமதுஷெரீப் தேசியக்கொடியேற்றினார். 
அதைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் சுங்குவெள்ளை பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், இதர பள்ளிகள், அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது. 
போடியில்: போடி புதிய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.மணிவாசகன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.சுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்.இதில், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கே.ஆர்த்தி தேசிய கொடியேற்றினார். இதேபோல், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம், நகராட்சி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது. போடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகர தலைவர் முசாக் மந்திரி வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். துணைத்தலைவர் சன்னாசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஹரிதாஸ் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் கல்லூரி தலைவர் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
மேலும், போடி அரசு பொறியியல் கல்லூரி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம்,  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுதந்திர தினிவிழா கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டியில்: ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். இதில் பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் எபி கொடியேற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் வட்டாட்சியர் அர்ஜூனன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் சமூகநலத் திட்ட வட்டாட்சியர் இளங்கோ, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையம், ஏஞ்சல் வித்யாலயா பள்ளி, செல்லம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையம், லிட்டில் பிளவர் நர்சரி பிரைமரி பள்ளி, டைமன் வித்யாலயா பள்ளிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உத்தமபாளையத்தில்: உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சார்பு நீதிபதி தோத்திரமேரி  தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதில், நீதிமன்ற அலுவலர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் சென்னியப்பன் தேசிய கொடியை ஏற்றினார். இதேபோல், உத்தமபாளையம் காவல் துணைக்காண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 
முன்னாள் படைவீரர்கள் சார்பில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன், தேசிய கொடி ஏற்றப்பட்டது. முன்னாள் படைவீரர்கள் பகவதிராஜ், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கடந்த 13 ஆண்டுகளாக சாலையோரத்தில் தேசிய கொடியை ஏற்றி வருவதால், சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி, க.புதுப்பட்டி எ.லக்கப்பகவுண்டர் வக்கலிகர் உயர்நிலைப்பள்,ளி கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, சின்னமனூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments