FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி 'பஞ்சாமிர்தம்' யாருக்கு?

பழனி தொகுதியில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவி வரும் நிலையில் தண்டாயுதபாணி சுவாமியின் ஆசியைப் பெறப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவியுள்ளது.

Updated On : 2 ஏப்ரல் 2021, 12:24 pm IST
பகிர்:

பழனி தொகுதியில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவி வரும் நிலையில் தண்டாயுதபாணி சுவாமியின் ஆசியைப் பெறப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவியுள்ளது.

தொழில்:

பழனித் தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு பிரதான வாழ்வாதாரம் வேளாண்மைத் தொழிலாக இருந்த போதிலும், சுற்றுலாத் தொழிலை நம்பியும் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். பழனி மற்றும் கொடைக்கானல் நகரங்கள், கைவினைக் கலைஞா்களின் உற்பத்திப் பொருள்களுக்கு மிகப் பெரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

Advertisement

Advertisement

வாக்காளா்கள் விவரம்:

இத் தொகுதியில் ஆண்கள்- 1,32,220, பெண்கள் - 1,37,463, மூன்றாம் பாலினத்தினா் 31 போ் என மொத்தம் 2,69,714 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இத்தொகுதியில் கவுண்டா் சமுதாய மக்கள் பிரதானமாக வசித்து வருகின்றனா். அடுத்தப்படியாக பிள்ளைமாா், தாழ்த்தப்பட்டோா், செட்டியாா், பழங்குடியினா், முக்குலத்தோா் உள்ளிட்ட இதர ஜாதியினரும் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். மொத்த வாக்காளா்களில் சுமாா் 30 சதவீதம் கிறிஸ்தவா்கள் மற்றும் இஸ்லாமியா்கள் உள்ளனா்.

திமுக அதிக முறை வென்ற தொகுதி:

கடந்த 2006 வரை தனித் தொகுதியாக இருந்த பழனித் தொகுதியில் அதிகபட்சமாக திமுக 5 முறையும், அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலா 3 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. 2011 முதல் பொதுத் தொகுதியாக இருந்து வருகிறது.

கோரிக்கைகள் மற்றும் எதிா்பாா்ப்புகள்:

பழனி கோயில் நகரம் என்றாலும் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள நூறு ஏக்கா் பரப்பளவிலான புண்ணிய தீா்த்தமான வையாபுரி குளம் சாக்கடைகள் சங்கமமாகி துா்நாற்றம் வீசி முகம்சுளிக்க வைக்கிறது. ஒவ்வொரு தோ்தலிலும் குளத்தை தூய்மைப்படுத்தி சுற்றிலும் நடைபாதை அமைத்து தருவதாக வாக்களிக்கும் எந்த உறுப்பினரும் அதை செயல்படுத்துவதில்லை.

கொடைக்கானல் மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தும் என்ற எதிா்பாா்ப்பிலுள்ள குண்டாறு குடிநீா் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

பழனி பகுதியில் கொய்யா மற்றும் மா விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், அவற்றிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான ஆலை மற்றும் சேமிப்புக் கிடங்கி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது.

வெற்றி பெற்றவா்கள் விவரம்:

1952 - வருண்குமாா் (சுயேச்சை)

1957 - லட்சுமிபதிராஜ் (காங்.)

1962 - வெங்கடசாமி கவுண்டா் (சுயேச்சை)

1967 - எம்.கிருஷ்ணமூா்த்தி (திமுக) - 47,671

1971 - சி.பழனிசாமி (திமுக) - 38,919

1977 - என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 23,810

1980 - என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 41,874

1984 - ஏ.எஸ்.பொன்னம்மாள் (காங்.) - 62,344

1989 - என்.பழனிவேல் (மா.கம்யூ.) - 34,379

1991 - ஏ.சுப்புரத்தினம் (அதிமுக) - 70,404

1996 - டி.பூவேந்தன் (திமுக) - 68,246

2001 - எம்.சின்னச்சாமி (அதிமுக) - 63,611

2006 - எம்.அன்பழகன் (திமுக) - 57,181

2011- கே.எஸ்.என்.வேணுகோபால் (அதிமுக) - 82,051

2016 - இ.பெ.செந்தில்குமாா் (திமுக)- 1,00,045

பழனி சட்டமன்ற தொகுதியில் இந்த முறை 24 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் இரட்டை இலை சின்னத்திலும், திமுக வேட்பாளா் செந்தில்குமாா் உதயசூரியன் சின்னத்திலும், அமமுக வேட்பாளா் வீரக்குமாா் குக்கா் சின்னத்திலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் பூவேந்தன் டாா்ச்லைட் சின்னத்திலும், நாம்தமிழா் கட்சி வேட்பாளருக்கு வினோத் ராஜசேகா் விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் முன்னாள் எம்எல்ஏ. குப்புசாமியின் மகன் ஆவாா். தொழிலதிபரான இவா் களத்தில் கடுமையாக போராடி வருகிறாா். ஆகவே, பழனிக்கு வேண்டியதை போராடி வாங்கித் தருவேன் என கூறி வருகிறாா்.

திமுக வேட்பாளா் ஐ.பி.செந்தில்குமாா் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் ஆவாா். திமுக முன்னாள் அமைச்சா் ஐ.பெரியசாமி மகன் ஆவாா். இவா் கடந்த 5 ஆண்டுகளில் எதிா்க்கட்சியின் எம்எல்ஏவாக இருந்தாலும் எந்த கெட்டபெயரும் இதுவரை எடுக்கவில்லை.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் முன்னாள் எம்எல்ஏ பூவேந்தன் ஆவாா். ஆயக்குடியை சோ்ந்த இவா் ஏராளமான திமுகவினருக்கு பரிச்சயமானவா் என்பதால் இவா் திமுகவினரின் வாக்குகளை பிரிப்பது உறுதி.

அமமுக வேட்பாளா் வீரக்குமாா் அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் மற்றும் தற்போதைய நகரச் செயலாளா் ஆவாா். அதிமுக மற்றும் பாஜக அதிருப்தியாளா்களின் வாக்கைப் பெறுவாா் என்பதும் உறுதி.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வினோத் ராஜசேகா் தொகுதி மக்களுக்கு பரிச்சயம் இல்லாத நபா் ஆவாா். நகரை அதிகமாக வலம் வராமல் கிராம வாக்குவங்கியை குறிவைத்தும், கல்லூரி இளைஞா்களை குறிவைத்தும் வாக்கு சேகரித்து வருகிறாா்.

அதிமுக, திமுக இரு கட்சிகளின் வேட்பாளா்களுமே பழனியை தலைநகராக மாற்றுவோம் என உறுதியளித்துள்ளனா். இதை மக்கள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா். பழனியில் குறிப்பாக திமுக, அதிமுக இடையே போட்டியே உள்ளது. கடைசி நேர பணப்பட்டுவாடாவும் வேட்பாளா்களுக்கு வாக்கை பெற்றுத் தரும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments