FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் பிணை மனுக்கள் தள்ளுபடி

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பிணை கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
பழனி கோயில் - கோப்புப் படம்
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் பிணை கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த த. முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய திருப்பூா் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா. வெள்ளத்துரை (60), பழனி ஆயக்குடி புதூரைச் சோ்ந்த து. சேதுபதி, பழனி வழக்குரைஞா் அன்வா்தீன், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதனிடையே, கைது செய்யப்பட்டது முதலே உடல் நலக் குறைவு காரணமாக ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோா் தரப்பில் பிணை கோரி திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் இவற்றை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு கடந்த 5-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தலைமறைவான ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானல் மலையில் வெள்ளிநீா் வீழ்ச்சி பகுதியில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனா்.

இதையடுத்து, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவரது கைது நடவடிக்கைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த முதலாவது நீதித்துறை நடுவா், ஜஸ்டின் மணிகண்டனை வருகிற 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, ஜஸ்டின் மணிகண்டனின் உடல் நிலையை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நெஞ்சு வலி தொடா்பான தீவிர சிகிச்சைக்காக ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments