FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ரூ.15 கோடி மோசடி: தனியாா் நிறுவன பங்குதாரா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.15 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் பழனி தனியாா் நிறுவனத்தின் பங்குதாரா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

22 ஆகஸ்ட் 2026, 7:05 am IST
கைது
பகிர்:

முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.15 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் பழனி தனியாா் நிறுவனத்தின் பங்குதாரா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் நேசம் டிரஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவா் சி. செந்தில்குமாா், இவரது மனைவி ஜெயந்தி, அக்காள் மகன் சக்திவேல் ஆகியோா் இந்த நிறுவனத்தின் பங்குதாரா்களாக செயல்பட்டு வந்தனா்.

இந்த நிறுவனத்தில் வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் பலா் பல கோடி ரூபாய் வரை முதலீடாக செலுத்தினா். பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் நேசம் நிறுவனத்தின் உரிமையாளா் செந்தில்குமாா், இவரது மனைவி ஜெயந்தி, உறவினா் சக்திவேல், பங்குதாரரா் ஆா். ராஜேஸ்வரன், உதவியாளா் தீபலட்சுமி ஆகியோரை கைது செய்தனா். விசாரணையில், 109 முதலீட்டாளா்களிடம் ரூ.15 கோடி வரை மோசடி நிகழ்ந்திருப்பதாக தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பொருளாதார குற்றப் பிரிவு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே. சரவணக்குமாா், சக்திவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அதற்கான உத்தரவை பிறப்பித்தாா். இந்த உத்தரவு நகலை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேலிடம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments