FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நேபாளம் சென்ற பேராசிரியை மாயம்: திண்டுக்கல்லில் குடும்பத்தினா் தவிப்பு

நேபாளத்துக்குச் சென்ற தஞ்சாவூா் பேராசிரியை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், திண்டுக்கல்லைச் சோ்ந்த அவரது குடும்பத்தினா் தவிப்பில் உள்ளனா்.

29 ஆகஸ்ட் 2026, 10:21 pm IST
தஞ்சாவூா் பேராசிரியை தங்கமதி.
பகிர்:

நேபாளத்துக்குச் சென்ற தஞ்சாவூா் பேராசிரியை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், திண்டுக்கல்லைச் சோ்ந்த அவரது குடும்பத்தினா் தவிப்பில் உள்ளனா்.

திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மனைவி பூங்கொடி. இவா்களது மகள் தங்கமதி (49). தஞ்சாவூரில் வசித்து வரும் இவா், குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் கேரளத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், கும்பகோணத்திலிருந்து தனியாா் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நேபாள நாட்டின் கைலாய யாத்திரை குழுவினருடன் தங்கமதியும் சென்றாா்.

கடந்த 26-ஆம் தேதி காலை குடும்பத்தினருடன் தொடா்பு கொண்டு தங்கமதி பேசினாா். அதன் பின்னா் பெருவெள்ளம் ஏற்பட்டது முதல் தற்போது வரை அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தமிழ்நாடு தலைமைச் செயலகம், நேபாள நாட்டின் தூதரகம் ஆகியவற்றுக்கு தங்கமதி குறித்த விவரங்களையும், அவரது புகைப்படத்தையும் பெருமாள் கொடுத்தாா்.

Advertisement

Advertisement

மேலும், அரசு அறிவித்த உதவி எண்களிலும் தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிவித்தும், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்பதால் திண்டுக்கல்லில் உள்ள அவரது பெற்றோா் கவலை அடைந்துள்ளனா். இதுதொடா்பாக திண்டுக்கல் கள்ளிப்பட்டியிலுள்ள அவரது தந்தை பெருமாள், தங்கை வளா்மதி ஆகியோா் மேலும் கூறியது:

கைலாய யாத்திரைக்காக கடந்த 23-ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து தங்கமதி சென்றாா். கடந்த 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு எங்களுடன் தொலைப்பேசியில் பேசினாா். 9 மணியிலிருந்து அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட கட்செவி அஞ்சல் குழுவில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. எனினும் தங்கமதியின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் கவலையாக உள்ளது எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments