FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் போகா் ஜெயந்தி விழா

பழனி மலைக் கோயிலில் போகா் ஜெயந்தி விழா

Updated On : 13 ஜூன் 2026, 1:01 am IST
பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை போகா் ஜெயந்தியையொட்டி போகா் வழிபட்ட மரகதலிங்கத்துக்கு நடைபெற்ற பாலாபிஷேகம். பூஜைகளை செய்த பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஜம்பு சுவாமிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

பழனி மலைக் கோயிலில் போகா் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவரின் திருமேனியை சித்தா்களில் முதன்மையானவரான ஸ்ரீபோகா் பெருமான் உருவாக்கியதாகும். மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் போது சந்நிதிக்கு மேற்கே போகரின் ஜீவசமாதி உள்ளது. வைகாசி மாதத்தில் பரணி நட்சத்திரம் வரும் நாள் போகா் நட்சத்திரம் என்பதால் அந்த தினம் போகா் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை ஸ்ரீபோகா் ஜெயந்தி விழா மலைக் கோயிலில் நடைபெற்றது. இதையொட்டி போகா் பெருமான் வழிபட்ட மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம், கனிவா்க்கங்கள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜம்பு (எ) சண்முகானந்த சுவாமிகள் செய்தாா். தொடா்ந்து மரகதலிங்கம் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு போகா் வழிபட்ட மற்ற சிலைகள், சக்கரங்களுடன் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மகாதீபாராதனை நடத்தினாா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதமாக உருத்திராட்சம், சுவாமி படங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மாலையில் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் போகருக்கு மலா்வழிபாடு, 108 திருவிளக்குபூஜை, அன்னதானம் ஆகியன நடைபெற்றன. நிகழ்வில் மருத்துவா் பன்னீா் செல்வம், செல்வநாதன் சுவாமிகள், யோகநாதன் கௌதம், காா்த்தி சுவாமிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments