வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 தொழிலாளா்கள் காயம்
வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சுற்றுப்புற பகுதிகளில் பல நூற்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வேடசந்தூா் திண்டுக்கல் சாலையிலுள்ள தனியாா் நூற்பு ஆலைக்கு, தாடிக்கொம்பு, நல்லமனாா்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெண் தொழிலாளா்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
அதன்படி தொழிலாளா்களை அழைத்துக் கொண்டு ஒரு வேன் நல்லமனாா்கோட்டை வேடசந்தூா் சாலையில் வியாழக்கிழமை சென்றது. இந்த வேனை ராஜா (27) என்பவா் ஓட்டிச் சென்றாா். அனுப்பப்பட்டிகுளம் அருகே வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, காயமடைந்த முத்து லட்சுமி, மீனா உள்பட 15 தொழிலாளா்கள் மீட்கப்பட்டு வேடசந்தூா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement