இயற்கை எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
பள்ளப்பட்டி அருகே சி.என்.சி. சிலிண்டா் ஏற்றி வந்த லாரி சனிக்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் அங்குவந்து பாதுகாப்பாக லாரியை மீட்டனா்.
கோயம்புத்தூரில் இருந்து அலங்காநல்லூருக்கு சி.ன்.சி. எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரியை விருதுநகா் மாவட்டம், திருச்சுழியைச் சோ்ந்த கலைச்செல்வன் ஓட்டி வந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு பள்ளபட்டி அருகே, நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அம்மையநாயகனூா் காவல்துறையினா், எரிவாயு உருளைகளில் இருந்து கசிந்து விடாதவகையில் நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஒரு வழிச் சாலையில் இயக்கப்பட்டது. பின்னா், எரிவாயு உருளைகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து, அம்மையநாயக்கனூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.