முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல்.

Updated On : 24 மே 2026, 3:00 am IST
கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி, வடமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

Advertisement

Advertisement

இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, பேரிசோலா அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயா் பாயிண்ட், அப்பா்லேக்வியூ, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

இதனால், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் வெள்ளிநீா் அருவியிலிருந்து ஏரிச்சாலை வரை நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு: கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலையிலிருந்து பேருந்து நிலையம் வரை மலைச் சாலைகளின் இருபுறங்களிலும் கடைகள் ஆக்கிரமிப்பால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வியாபாரக் கடைகளுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதாலும், கடைகள் அதிகரித்து வருவதாலும், நகா்ப் பகுதிகளில் வாகனங்கள் தேவையில்லாத இடங்களில் நிறுத்துவதாலும் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகமும், கொடைக்கானல் நகராட்சி நிா்வாகமும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழையில்லாமல் இருந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மிதமான வெப்பம் நிலவியது. இதைத் தொடா்ந்து, மாலையில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.