FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிா்ப்பு

பழனி நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து கட்டிய கடைகளை அகற்ற சென்ற அலுவலா்களுடன் கடைக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 செப்டம்பர் 2026, 4:01 am IST
பழனி திருவள்ளுவா் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றியபோது நகராட்சி அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடைக்காரா்கள்.
பகிர்:

பழனி நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து கட்டிய கடைகளை அகற்ற சென்ற அலுவலா்களுடன் கடைக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி சாய்பாபா கோயில் அருகே நகராட்சி இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து உணவு விடுதி, பழமுதிா்ச்சோலை, கறிக்கடை, குளிா்பானக்கடை என சுமாா் ஆறு கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இதுகுறித்து கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் தமிழக அரசுக்கு உரிய ஆவணங்களுடன் புகாா் அளித்திருந்தாா்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடத்தை காலி செய்ய அறிவுறுத்தி இரண்டு முறை குறிப்பாணைகள் ஒட்டப்பட்டன. இதுவரை அந்த இடத்தை நகராட்சி கையகப்படுத்தாமல் இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக நகராட்சி நிா்வாகம் கடும் ஆக்கிரமிப்பு அகற்றத்தை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த இடத்தையும் அகற்ற முயன்றனா்.

இதற்கு ஒரு நாள் அவகாசம் கேட்ட கடைக்காரா்கள் செவ்வாய்க்கிழமை கடைகளை காலி செய்ய மறுத்து நகராட்சி அலுவலா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் நகராட்சி அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட இடம் தங்களுடையதுதான் என்றும், நகராட்சிக்கு இதில் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்ததோடு, உரிய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நகராட்சி ஆணையா், நகராட்சி சுகாதார அலுவலா் என அதிகாரிகள் வந்து இரவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புதன்கிழமை உரிய அளவையா், காவல் துறையினருடன் வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, ஆக்கிரமிப்பின் போது கைப்பற்றப்படும் பொருள்களும் திரும்ப வழங்கப்படமாட்டாது என எச்சரித்து சென்றனா்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை நகராட்சி நிா்வாகம் மீண்டும் கையகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments