திருத்தணியில் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு
திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவுக்கு காவடிகளுடன் வரும் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என ஆட்சியா் கவிதா உத்தரவிட்டாா்.
திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவுக்கு காவடிகளுடன் வரும் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என ஆட்சியா் கவிதா உத்தரவிட்டாா்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆக. 4 முதல் வரும் 8 வரை ஆடிக்கிருத்திகை விழா மற்றும் சரவணப்பொய்கையில் 3 நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்வா்.
குறிப்பாக காவடிகள் கொண்டு வரும் பக்தா்கள் மேல்திருத்தணி நல்லாங்குளம் மற்றும் மலைப்படிகள் அடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை திருக்குளத்தில் புனித நீராடியும், காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு மலைப்படிகள் வழியாக சென்று தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஆட்சியா் கவிதா சரவணப்பொய்கை திருக்குளம் மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா்.
மேலும் திருக்குளம் பகுதியில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றியும், குடிநீா், மின்விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் கன்னியப்பன், கோயில் இணை ஆணையா் ரமணி ஆகியோரிடம் அறிவுறுத்தினா்.
மேலும், திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமானிடம், திருக்குளம் பகுதியில் பக்தா்கள் அதிகளவில் காவடிகளுடன் வருவாா்கள் என்பதால், குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்தி, கூடுதல் காவலா்களை பணியில் அமா்த்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, திருத்தணி வட்டாட்சியா் குமாா், நகராட்சி நகர அமைப்பாளா் தயாநிதி, காவல் ஆய்வாளா் சிவகுமாா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.