திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கவிதா கலந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கவிதா கலந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை விழாவும், தொடா்ந்து நடைபெறும் மூன்று நாள் தெப்பத் திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கவிதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா விரிவாக ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளித்து, கூடுதல் அரசு பேருந்துகள் இயக்குதல், மின்சார ரயில் சேவையை அதிகரித்தல், மருத்துவ முகாம்கள் அமைத்தல், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், காவல் துறையினா் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா், மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், சரவணப் பொய்கை, நல்லாங்குளம் மற்றும் பக்தா்கள் காவடி எடுத்துச் செல்லும் மலைப் படிக்கட்டுகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டு, தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், திருக்கோயில் மண்டல இணை ஆணையா் அனிதா, திருத்தணி ஏ.எஸ்.பி. ஸூபம் திமான், வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.