மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவர்களை சேர்க்கக் கூடாது: தமிழ்நாடு மருத்துவக் கழக தமிழக தலைவர் பேட்டி
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவர்களை சேர்க்கக்கூடாது என தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் புதிய தலைவர், கே.செந்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவர்களை சேர்க்கக்கூடாது என தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் புதிய தலைவர், கே.செந்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1500 பட்ட மேற்படிப்பு இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1500 இடங்களும் உள்ளன. இதில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்திய மருத்துவக் கழகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பேரில் மருத்துவக் குழு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் சேர்க்கை குறித்து முடிவெடுக்கும்.
Advertisement
Advertisement
ஆனால், பல கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக மாணவர்களை சேர்க்கின்றனர். கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி கோரும் கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு இதில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம், அனுமதிக்கப்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மருத்துவப் பல்கலைக் கழகம் அனுமதித்துள்ளது. எனவே அவர்களை மருத்துவர்களாகப் பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
மேலும் இதை முறைப்படுத்த, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்கள், தாங்கள் கூடுதலாகக் கோரும் இடங்கள் ஆகிய விவரங்கள் குறித்து வரும் ஜூலை 30-க்குள் தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். ஏப். 30-க்குள் சிறிய அபராதத்துடன் அவர்கள் பதிவு செய்யலாம்.
தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து அண்மையில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே 10 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி, உள் கட்டமைப்புகள், சிகிச்சை உபகரணங்கள் அடிப்படையில் மூன்று வகையாகத் தரம் பிரிக்கப்படும். இந்தப் பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.