வழித்தடம் மாறிச் செல்லும் சிற்றுந்துகள்: ஆட்சியரிடம் புகார் செய்ய மக்கள் முடிவு
மதுரையில் வழித்தடம் மாறிச் செல்லும் சிற்றுந்துகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரையில் வழித்தடம் மாறிச் செல்லும் சிற்றுந்துகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை கூடல்நகரை அடுத்த கூடல்புதூர், ஜெ. ஜெயலலிதா நகர், 40 வீடு காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கிருந்து, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் கூலி வேலைக்கு நகருக்குள் சென்று வருகின்றனர்.
இப்பகுதி வழியே இரு அரசுப் பேருந்துகளும், 5-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகளும் சென்றுவந்தன. இதனால், இப்பகுதியினர் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிரமமில்லாமல் சென்றுவந்தனர்.
Advertisement
Advertisement
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் சிற்றுந்துகள் வருவதில்லையாம். இச்சிற்றுந்துகள், கூடல்புதூர், ஜெ.ஜெயலலிதா நகர் வழியாகச் செல்வதற்கு பதிலாக, வழித்தடம் மாறி முதல் நீர்தேக்கத் தொட்டி, இரண்டாம் நீர்தேக்கத் தொட்டி, சிலையநேரி பேருந்து நிறுத்தங்கள் வழியாகச் செல்கின்றன.
இதனால், ஜெ. ஜெயலலிதா நகர் பகுதி மக்கள், பள்ளிக் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மீண்டும் சிற்றுந்துகள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியினர் தெரிவிக்கையில், சிற்றுந்துகளுக்கு கூடல்புதூர், ஜெ. ஜெயலலிதா நகர் வழியே செல்ல அனுமதி இருந்தும், அவை கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி வழியே வருவதில்லை. இது சம்பந்தமாக, வடக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, வரும் 7ஆம் தேதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளனர் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.