கருணாநிதி மறைவு: அனைத்துக்கட்சியினர் அமைதிப் பேரணி: கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடின
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து புதன்கிழமை அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. திமுகவினர் நகரின் முக்கிய பகுதிகளில் கருணாநிதியின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருப்பரங்குன்றத்தில் கோயில் பணியாளர் கலைஞர் மற்றும் திமுகவைச் சேர்ந்த பாலு ஆகியோர் முடிகாணிக்கை செலுத்தினர். மேலும் மதுரை விமான நிலையத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற அமைதிப்பேரணி நடைபெற்றது.
திருமங்கலம்: திருமங்கலம் திமுக நகர பொருளாளர் மு.சி.சோ.சி. முருகன் தலைமையில் அனைத்துக்கட்சியினர் நடத்திய அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அதிமுக, அமமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சந்தைப் பேட்டையில் தொடங்கிய பேரணி தேவர்சிலை முன்பு முடிவு பெற்றது.
மேலூர்: மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலூர் அருகிலுள்ள மலம்பட்டி, ஆட்டுக்குளம் விலக்கு, சின்ன சூரக்குண்டு, சுக்காம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சியினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்கவில்லை. நகரில் பல்வேறு இடங்களிலும் கருணாநிதி உருவப்படம் மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் திமுக தலைவர் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சி திமுக நகரச் செயலாளர் தங்கமலைப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர் சுதந்திரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் நீதிபதி, அதிமுக நகரச் செயலாளர் பூமாராஜா, அமமுக, மாவட்டச் செயலாளர் மகேந்திரன், ஒன்றியச் செயலாளர் சேதுராமன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் துரை,தனராஜன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியினர், பாரதீயபார்வட்பிளாக் கட்சியினர், 58 கிராம கால்வாய் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கார்த்திகைசாமி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.